Saturday, November 7, 2020

 வாக்ய வ்ருத்தி

    [ஜீவ - ப்ரஹ்ம அபேதத்தைக் கூறுவதாக ஒவ்வொரு வேதத்துக்கும் ஒரு மஹாவாக்கியமாக உபநிஷத்துக்களிலுள்ள நான்கு மஹா வாக்கியங்களில் உபதேச வாக்கியமாயுள்ள 'தத் த்வம் அஸி'' என்ற மஹா வாக்கியத்திற்கு வியாக்யானமாக இப்பிரகரணம் ஸ்ரீமத் சங்கர பகவத் பாதாசார்யாரால் அனுக்ரஹிக்கப்பட்டிருக்கிறது. இது குரு - சிஷ்ய ஸம்வாத ரூபமாய் அமைக்கிப்பட்டிருக்கிறது.]

 ஸர்க3 - ஸ்தி3தி - ப்ரளய - ஹேதுமசிந்த்ய - சக்திம்

       விச்வேச்வரம் விதி3த - விச்வ - மநந்த - மூர்திம் |

நிர்முக்த – ப3ந்த4ந – மபாரஸுகா2ம்பு3 - ராசிம்

       ஸ்ரீவல்லப4ம் விமல – போ344நம் நமாமி ||                             1

   ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி, பிரளயம் இவைகளுக்குக் காரணமாயும், மனத்தினால் சிந்திக்க முடியாத சக்தி வாய்ந்தவராகவும், ஸகல பிரபஞ்சத்திற்கும் ஈசுவரராயும், ஜகத் முழுவதையும் அறிந்தவராயும், எல்லையில்லாத ஸ்வரூப முள்ளவராயும், எவ்விதக் கட்டுக்களும் இல்லாதவராயும், கரையற்ற ஆனந்தக் கடலாயும், லக்ஷ்மீபதியாகவும் (அதாவது ஸகலவித ஸம்பத்தோடு கூடினவ ராயும்), நிர்மலமான ஞானக்கட்டியாயுமுள்ளவரை நமஸ்கரிக்கிறேன்.

யஸ்ய ப்ரஸாதா3 – த3ஹமேவ விஷ்ணு:

       மய்யேவ ஸர்வம் பரிகல் பிதம் ச |

இத்தம் விஜாநாமி ஸதா3த்மரூபம்

       தஸ்யாங்க்4ரி பத்3மம் ப்ரணதோ(அ)ஸ்மி நித்யம் ||                      2

      எவருடைய அனுக்ரஹத்தால் நானே விஷ்ணு (அதாவது ஸர்வ வியாபகம்) என்றும், என்னிடத்திலேயே எல்லாம் கல்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் இவ்விதமாக ஸத்தாக இருக்கும் ஆத்மஸ்வரூபத்தை நான் அறிகிறேனோ, அவருடைய பாத கமலத்தை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறவனாக இருக்கிறேன்.

தாப - த்ரயார்க - ஸந்தப்த: கச்சி – து3த்3விக்3ந மாநஸ:

சமாதி3 – ஸாத4நைர் - யுக்த: ஸத்3கு3ரும் பரிப்ருச்ச2தி ||                        3

  மூன்று வித தாபங்களாகிற ஸூர்யனால் நன்கு தபித்தவனாய் (எப்படி இவைகளிலிருந்து விடுபடுவோம் என்று) நடுங்கின மனதுள்ளவனாய் ஒருவன் சமம் (மனவடக்கம்) முதலான ஸாதனங்களுடன் கூடினவனாய் உத்தமமான குருவை (தேடியடைந்து) நன்கு ஆலோசித்துப் பின்வருமாறு கேட்கிறான்.

 [தாபம் மூன்றுவிதம்: - தன் சரீரத்திற்குள்ளேயே பூர்வ கர்மாவின் பலனாக ஏற்படக்கூடிய ஜ்வரம் முதலியது. இது ஆத்யாத்மிகம்; தன்னைத் தவிர உள்ள திருடன், புலி முதலியதால் ஏற்படக்கூடிய தாபம் ஆதிபௌதிகம்; அக்னி, வாயு முதலான தேவதைகளால் ஏற்படக்கூடிய மழை : இடி முதலிய தாபம் ஆதிதைவிகம்.]

அநாயாஸேன யோநாஸ்மாந் முச்யேய ப4வ ப3ந்த4நாத் |

தந் மே ஸம்க்ஷிப்ய பகவந் கேவலம் க்ருபயா வத3 ||                          4

 ஹே, பகவான்! இந்த ஸம்ஸாரமாகிற கட்டிலிருந்து சிரமமில்லாமல் எந்த உபாயத்தினால் விடுபடுவேனோ அதைச் சுருக்கமாக எனக்குத் தூய கருணையினால் சொல்லும்.

 [குரு ஆத்மஞானியாயிருப்பதால் அவருக்கு சிஷ்யனால் ஆக வேண்டிய கார்யம் ஒன்றுமில்லை. குருவினுடைய மஹிமைக்குத் தக்கபடி ஸேவை செய்யவும் சிஷ்யனுக்குச் சக்தியில்லை. ஆகையால் குரு தனக்கு எதையும் எதிர்பாராக் கருணையினால் மாத்திரம் அனுக்கிரஹிக்க வேண்டுமென்பதையும் வினயத்துடன் தெரிவிக்கிறான்.]

குரு சொல்கிறார்: -

ஸாத்4வீ தே வசந - வ்யக்தி: ப்ரதிபா4தி வதா3மி தே |

இத3ம் ததி3தி விஸ்பஷ்டம் ஸாவதா4நமநா: ச்ருணு ||                          5

  நீ வாக்கினால் வெளியிட்டது மிகவும் அழகாகப் பிரகாசிக்கிறது. இதுதான் அது (விடுபடும் வழி) என்று வெகு தெளிவாக உனக்குச் சொல்கிறேன். அதிலேயே மனதைச் செலுத்திக் கேள்.

தத் – த்வமஸ்யாதி3 – வாக்யோத்த2ம் யஜ்ஜீவ - பரமாத்மநோ: |

தாதா3த்ம்ய விஷயம் ஜ்ஞானம் ததி33ம் முக்தி – ஸாத4னம் ||                 6

    “தத் த்வம் அஸி முதலான வாக்கியங்களிலிருந்து ஏற்படுவதுதான் ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள ஒரே தன்மையை விஷயமாய்க்கொண்ட ஞானம் எதுவோ, அதுவே இந்த (நீ கேட்ட) விடுதலைக்கு ஸாதனம்.

  [சிஷ்யன் மோக்ஷ ஸாதனத்தைச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்று கேட்டுக்கொண்டதையனுஸரித்து குரு வெகு சுருக்கமாய் சொல்லி விட்டார். அதாவது ஜீவனும் - பரமாத்மாவும் வாஸ்தவ ஸ்வரூபநிலையில் ஒன்று தான் என்று உணர்ந்துவிட்டால் மோக்ஷம் ஏற்பட்டுவிடும்.]

 சிஷ்யன் கேட்கிறான்: -

கோ ஜீவ: க: பரச்சாத்மா தாதா3த்ம்யம் வா கத3ம் தயோ: |

தத் – த்வமஸ்யாதி3 வாக்யம் வா கத2ம் தத் ப்ரதிபாத3யேத் ||                  7

    ஜீவன் என்பது யார்? பரமாத்மாவும் யார்? அவ்விருவர்களுக்கும் ஒன்றாயிருக்கும் தன்மைதான் எப்படி? அத்தன்மையை 'தத்த்வம் அஸி' முதலான வாக்கியந்தான், எப்படி எடுத்துக்காட்டும்?

குரு பதில் சொல்கிறார்: -

அத்ர ப்3ரூம: ஸமாதா4னம் கோ(அ)ந்யோ ஜீவஸ் - த்வமேவ ஹி |

யஸ் - த்வம் ப்ருச்ச2ஸி மாம் கோ(அ)ஹம் ப்3ரஹ்மைவாஸி ந ஸம்சய: ||   8

      இந்த விஷயத்தில் ஸமாதானத்தை (ஸந்தேஹ விளக்கத்தை)ச் சொல்கிறோம். ஜீவன் என்பது வேறு யார்? நீயேதான். என்னைப் பார்த்து 'நான் யார்' என்று எந்த நீ கேட்கிறாயோ (அந்த நீ) பிரஹ்மமாகவே இருக்கிறாய். ஸந்தேஹம் இல்லை.

சிஷ்யன் கேட்கிறான்: -

பதா3ர்த2மேவ ஜாநாமி நாத்3யாபி பகவந் ஸ்பு2டம் |

அஹம் ப்3ரஹ்மேதி வாக்யார்த2ம் ப்ரதிபத்3யே கத2ம் வத3 ||                   9

  ஹே பகவன், இன்னமும் பதங்களின் அர்த்தத்தைக் கூடத் தெளிவாக நான் அறியவில்லை (அப்படியிருக்க) நானே பிரஹ்மம் என்றுள்ள வாக்கியத்தின் அர்த்தத்தை எப்படி நான் அனுபவத்தில் பெறுவேன்? சொல்லுங்கள்.

குரு சொல்கிறார்: -

ஸத்யமாஹ ப4வநத்ர விகா3நம் தைவ வித்3யதே |

ஹேது: பதா3ர்த2 – போ3தோ4 ஹி வாக்யார்தா2வக3 தேரிஹ ||                 10

    நீ வாஸ்தவமான விஷயத்தை யே சொன்னாய். இந்த விஷயத்தில் அபிப்ராய பேதம் கொஞ்சமேனும் கிடையாது. ஏனென்றால் இங்கு வாக்கியார்த்தத்தை அறிவதற்கு பதங்களின் அர்த்தத்தை அறிவது தான் காரணமாகும்.

      [பதங்களின் அர்த்தம் தெரிந்தால் தான், வாக்கியத்தின் அர்த்தம் புலப்படும் என்று சிஷ்யன் சொன்ன விஷயத்தை குருவும் ஆமோதித்து விட்டு தத், த்வம், அஸி என்ற பதங்களை விளக்க ஆரம்பிக்கிறார். அவைகளில் முதலிலுள்ள'தத்'என்ற பிரஹ்மத்தின் ஸ்வ ரூபமும், கடைசியிலுள்ள 'அஸி' என்பதால் சொல்லப்படும் ஜீவ பிரஹ்ம ஐக்கியமும் கிரஹிக்கப்படுதற்கு சிரமமாயிருக்கு மாதலால், நடுவிலுள்ள 'த்வம்' (நீ) என்கிற ஆத்ம தத்வம் எல்லோருக்கும் ப்ரத்யக்ஷமாகவே இருக்கையில் அதை சிரமமில்லாமலே கிரஹிக்கலாமே என்ற எண்ணத்துடன் மஹாவாக்கியத்திலுள்ள பதங்களின் வரிசையை மாற்றி த்வம், தத், அஸி என்ற கிரமமாக அர்த்தம் சொல்கிறார்.]

அந்தகரண தத்3 - வ்ருத்தி ஸாக்ஷ சைதன்ய விக்3ரஹ: |

ஆநந்த3- ரூப: ஸத்ய: ஸந் கிம் நாத்மாநம் ப்ரபத்3யஸே ||                     11

   அந்தக்கரணத்தையும் அதன் விருத்திகளையும் பார்த்துக்கொண்டு ஆனந்த ஸ்வரூபனாய் - ஸத்ய ஸ்வரூபனாய் - சைதன்ய ஸ்வரூபனாய் இருந்துகொண்டு தன்னை ஏன் அறிந்து கொள்ள வில்லை?

ஸத்யாநந்த3ஸ்வரூபம் தீ4 - ஸாக்ஷிணம் ஞாந விக்3ரஹம் |

சிந்தயாத்மதயா நித்யம் த்யக்த்வா தே3ஹாதி3கா3ம் தி4யம் ||                  12

   தேஹம் முதலானவைகளில் உள்ள நான் என்கிற எண்ணத்தை விட்டு விட்டு, ஸத்ய ஸ்வரூபமாய் - ஆனந்த ஸ்வரூபமாய் - புத்திக்கும் ஸாக்ஷியாய் ஞான ஸ்வரூபமாயுள்ளதை நான் என்று எப்பொழுதும் சிந்தித்துக் கொள்.

ரூபாதி3மாந் யத: பிண்ட3ஸ் - ததோ நாத்மா க4டாதி3வத் |

வியதா3தி – மஹாபூ4த - விகாரத்வாச்ச கும்ப4வத் ||                            13

      இந்த சரீரமானது ரூபம் முதலான துகளுடன் கூடியதாக இருக்கும் தன்மையுடையது என்ற இக்தக் காரணத்தினால் குடம் முதலானவைகளைப் போலவே ஆத்மா அல்ல. ஆகாசம் முதலிய பஞ்ச மஹா பூதங்களின் கார்யமாக இருப்பதாலும் (ஆத்மாவல்ல).

      [எப்படி குடம் முதலானது உருவம் முதலிய தோடு இருப்பதாலும் ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், பிருதிவீ என்ற ஐந்து மஹா பூதங்களால் செய்யப்பட்டிருப்பதாலும் ரூபாதிகளற்ற கார்யமல்லாத ஆத்மா ஆகாதோ, அப்படியேதான் இந்த சரீரமும் ரூபாதிகளோடு கூடியிருப்பதனாலும் ஆத்மா ஆகாது என்று யுக்தியினாலேயே தெரிந்துகொள்ளலாம் என்று குரு எடுத்துச் சொல்கிறார்.]

சிஷ்யன் கூறுவது:

அநாத்மா யதி3 பிண்டோ3(அ)ய - முக்தஹேது – ப3லாந் - மத: |

கராமலகவத் - ஸாக்ஷாத் ஆத்மாநம் ப்ரதிபாத3||                            14

      இந்த சரீரம் (தாங்கள்) சொன்ன யுக்தியின் பலத்தினால் ஆத்மாவல்ல என்று எண்ணப்பட்டதாக இருந்த தேயானால், ஆத்மா வை உள்ளங்கை நெல்லிக் கனிபோல நேராக எடுத்துச் சொல்லுங்கள்.

குரு சொல்கிறார்:

4ட – த்3ரஷ்டா க4டாத்3 – பி4ந்ந ஸர்வதா2 ந க4டோ யதா2 |

தே3ஹ – த்3ரஷ்டா ததா3 தே3ஹோ நாஹமித் – யவதா4ரய ||                   15

      எப்படி குடத்தைப் பார்க்கிறவன் குடத்திலிருந்து வேறுபட்டவனாயிருப்பவன் (ஆதலால்) எவ்விதத்திலும் குடமாக ஆக மாட்டானோ, அப்படியேதான் தேஹத்தைப் பார்க்கிறவனான நான் தேஹமாக இருக்க முடியாது என்று நிச்சயம் செய்து கொள்.

ஏவ – மிந்த்3ரிய – த்3ருக் நாஹ – மிந்த்3ரியாணீதி நிச்சிநு |

மநோ - புத்திஸ் - ததா ப்ராணோ நாஹ – மித்யவதா4ரய ||                    16

    இப்படியே இந்திரியங்களைப் பார்த்துக்கொண்டிருப்பவனான நான் இந்திரியங்கள் அல்லவென்று தீர்மானம் செய்துகொள். அப்படியே மனசும், புத்தியும், பிராணனும் நான் அல்லவென்று நிச்சயித்துக்கொள்.

ஸங்கா4தோ(அ)பி ததா2 நாஹமிதி த்3ருச்ய விலக்ஷணம் |

த்3ரஷ்டார - மநுமாநேந நிபுணம் ஸம்ப்ரதா4ரய ||                              17

      அப்படியே (தேஹம், இந்திரியங்கள் பிராணன், மனஸ், புத்தி இவைகள் சேர்ந்த) கூட்டமும் நான் அல்லவென்று, பார்க்கப்படுபவைகளுக்கு வேறான லக்ஷணத்தோடு கூடிய பார்க்கிறவனை அனுமானத்தினால் நன்றாகத் தீர்மானம் செய்து கொள்.

தே3ஹேந்த்3ரியாத3யோ பா4வா ஹாநாதி3 - வ்யாப்ருதி - க்ஷமா: |

யஸ்ய ஸந்நிதி4 - மாத்ரேண ஸோ(அ)ஹமித்யவதா4ரய ||                     18

  தேஹம், இந்திரியங்கள் முதலான பதார்த்தங்கள் எவருடைய ஸந்நிதி மாத்திரத்தாலேயே தள்ளுவது முதலான வியாபாரங்களில் சக்தியுள்ளவைகளாக இருக்கின்றன வோ, அவர்தான் நான் என்று தீர்மானித்துக் கொள்.

   [ஜடமாக இருக்கும் எந்தப் பதார்த்தத்திற்கும் தானாக எவ்வித சேஷ்டையும் கிடையாது. அதில் ஏதேனும் சேஷ்டை காணப்பட்டால் அதற்குக் காரணமாக ஒரு சேதனன் இருந்தாகவேண்டும். தேஹம், இந்திரியங்கள், மனஸ் முதலானவைகள் அனுகூலமான பதார்த்தத்தை எடுக்கவும், பிரதிகூலமான பதார்த்தத்தை தள்ளவும் செய்கின்றன என்றால் அதற்கெல்லாம் காரணம் சேதனனான ஆத்மா அவைகளுடன் கூடவேயிருப்பதுதான். ஆகையால் ஜட பதார்த்தங்களிலுள்ள வியாபாரங்களுக்கு நிமித்தமாயிருக்கும் சேதனனே ஆத்மா என்று அறியவேண்டும். இந்த ஆத்மா, தான் சேஷ்டியாமலே பிறவற்றைச் சேஷ்டிக்கச் செய்வதற்கு உதாரணமாக ஒரு காந்தத் துண்டு தான் அசையாமலே தன் ஸந்நிதி மாத்திரத்தால் இரும்பை அசையச் செய்வதை இனி சொல்கிறார்.]

அநாபந்ந-விகார: ஸங்–நயஸ்காந்தவதே3வ ய: |

புத்3த்4யாதீ3ம்-ச்சாலயேத் ப்ரத்யக் ஸோ(அ)ஹமித்யவதா4ரய ||                 19

  இரும்பை ஆகர்ஷிக்கும் காந்தம் மாதிரியே, (தான்) எவ்வித மாறுதலையும் அடையாமல் இருந்துகொண்டே புத்தி முதலானவைகளை எது சலிக்கும்படி செய்கிறதோ அந்த உள்ளே இருக்கும் தத்வம் தான் நான் என்று தீர்மானித்துக் கொள்.

அஜடா3த்மவதா3பா4ந்தி யத்ஸாந்நித்3யாத் ஜடா3அபி |

தே3ஹேந்த்3ரிய மந: ப்ராணா: ஸோ(அ)ஹமித்யவதா4ரய ||                    20

  தேஹம் இந்திரியங்கள் மனஸ் பிராணன் இவை ஜடமாக இருந்த போதிலும் கூட எவருடைய ஸந்நிதியால் ஜடத்தன்மையில்லாதவை போல தோன்றுகின்றன வோ அவர் நான் என்று தீர்மானம் செய்துகொள். (ஆத்மாவே இங்கு குறிக்கப்படும் அவர்.)

அக3மந் மே மநோ(அ)ந்யத்ர ஸாம்ப்ரதம் ச ஸ்தி2ரீக்ருதம் |

ஏவம் யோ வேத3 தீ4வ்ருத்திம் ஸோ(அ)ஹமித்யவதா4ரய ||                   21

    ''என்னுடைய மன ஸானது வேறு இடத்தில் போயிருந்தது. இப்போது ஸ்திரமாகச் செய்யப்பட்டுவிட்டது'' என்று இவ்விதமாக புத்தியினுடைய வியாபாரத்தை எவர் அறிகிறாரோ, அவர்தான் ''நான்'' என்று தீர்மானித்துக் கொள்.

ஸ்வப்ந ஜாக3ரிதே ஸுப்திம் பா4வாபா4வௌ தி4யாம் ததா2 |

யோவேத்த்யவிக்ரிய: ஸாக்ஷாத் ஸோ(அ)ஹமித்யவதா4ரய ||                 22

   ஸ்வப்னத்தையும், ஜாக்கிரத்தையும் (விழிப்பையும்) ஸுஷுப்தியையும் (தூக்கத்தையும்) அப்படியே புத்தி விருத்திகளுடைய இருக்கும் தன்மையையும் இல்லாத் தன்மையையும் எவர் ஒரு வித மாறுதலு மடையாமல் நேராகவே அறிகிறாரோ அவர்தான் நான் என்று தீர்மானம் செய்து கொள்.

4டாவபா4ஸகோ தீ3போ க4டாத3ந்யோ யதே2ஷ்யதே |

தே3ஹாவபா4ஸகோ தே3ஹீ ததா(அ)ஹம் போ34-விக்ரஹ: ||                 23

  குடத்தைத் தெரியப்படுத்தும் தீபமானது குடத்தைத் தவிர வேறு என்று எப்படி ஒப்புக்கொள்ளப்படுகிறதோ, அப்படியே தேஹத்தை பிரகாசிக்கச் செய்கிறவனும் ஞான ஸ்வரூபனுமான தேஹத்தினுடைய'நான்'' தேஹத்தைக் காட்டிலும் வேறு.

புத்ர வித்தாத3யோ பா4வா யஸ்ய சேஷதயா ப்ரியா: |

த்3ரஷ்டா ஸர்வ ப்ரியதம: ஸோ(அ)ஹமித்யவதா4ரய ||                        24

  புத்திரன், தனம் முதலிய பதார்த்தங்கள் எவருக்கு அங்கமாயிருப்பத னாலேயே பிரியமாக இருக்கின்றனவோ, (அங்கியாயிருந்து) பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆத்மா எல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் பிரியமானவர். அவர் தான் நான் என்று தீர்மானம் செய்துகொள்.

பர–ப்ரேமாஸ்பத3தயா மா ந பூ4வமஹம் ஸதா3 |

பூ4யாஸமிதி யோ த்3ரஷ்டா ஸோ(அ)ஹமித்யவதா4ரய ||                      25

   நான் இல்லாமலிருக்கக் கூடாது, எப்பொழுதும் இருப்பேனாகவும் என்று மேலான பிரீதிக்கு விஷயமாயிருக்கும் தன்மையினால் எவர் பார்க்கிறவராக இருக்கிறாரோ அவர்தான் நான் என்று நிச்சயமாகத் தெரிந்து கொள்.

      [தன்னைத் தவிர பிரீதிக்கு விஷயமாயிருக்கும் வேறு பதார்த்தங்கள் எவ்வளவு பிரியமாயிருந்தபோதிலும் அவைகளை அனுபவிக்கும் மையத்தில் தான் அவை தேவைப்படுமே தவிர, எப்பொழுதுமே தன்னுடன் இருந்தாகவேண்டும் என்று யாரும் நினைப்பது கிடையாது. அனுபவிக்கவேண்டுமென்ற எண்ணம் இருக்கும் போதுதான் அவைகளை விட்டுவிடத் தோன்றாதே தவிர, அனுபவித்துவிட்ட பிறகும் அலுத்துப்போன பிறகும், அவைகளால் தொந்தரவும், துக்கமும் ஏற்படுகின்றன வென்பதை உணர்ந்த பிறகும், அவைகளை வைத்துக்கொண்டேயிருக்க வேண்டு மென்று நினைப்பது கிடையாது. தன் விஷயத்தில் மாத்திரம் தான் இல்லாமல் போக வேண்டும்'' என்கிற எண்ணம் ஒருநாளும் ஒருவருக்கும் ஏற்படுகிறதில்லை யாதலால், தன்னிடத்தில் வைத்திருக்கும் பிரீதிதான் எல்லாவற்றிற்கும் மேலானது. அவ்விதம் உத்தம பிரீதிக்கு விஷயமாயிருக்கிறதான'தான்'' என்பதுதான் ஆத்மா. அதைத் தவிர மற்ற பதார்த்தங்களில் வைத்திருக்கும் பிரீதி சில சமயத்திலேயே இருப்பதாலும், அந்தப் பிரீதியும் கூட தன்னிடத்திலுள்ள பிரீதிக்கு அங்கமாக வேயிருப்பதாலும் அப்பதார்த்தங்கள் யாவும் ஆத்மாவல்ல, அனாத்மாவேயாகும். அவைகளை அனுபவிக்கிறவரே ஆத்மா. அவர்தான் நான்.]

ய: ஸாக்ஷி-லக்ஷணோ போ34ஸ்-த்வம்-பதா3ர்த3: ஸ உச்யதோ |

ஸாக்ஷித்வமபி போ3த்3த்4ருத்வ - மவிகாரிதயா(ஆ)த்மந: ||                    26

  ஸாக்ஷியாயிருக்கும் லக்ஷணத்துடன் உள்ள அறிவு எதுவோ, அதுதான்'தவம்'(நீ) என்கிற பதத்தின் பொருள் என்று சொல்லப்படுகிறது. ஆத்மாவினுடைய ஸாக்ஷியாயிருக்கும் தன்மை என்பது கூட, தான் எவ்வித மாறுதலையும் அடையாமலே அறியும் தன்மையேயாகும்.

தே3ஹேந்த்3ரிய மந: ப்ராணாஹங்க்ருதிப்4யோ விலக்ஷண: |

ப்ரோஜ்ஜி2தாசேஷ-ஷட்3-பா4வ விகாரஸ் - த்வம் - பதாபித: || 27

      தேஹம், இந்திரியங்கள், மனஸ், பிராணன், அஹங்காரம் இவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாகவும், பதார்த்தங்களுத்கு ஏற்பட்ட ஆறுவித விகாரங்கள் யாவும் அற்றதாகவும் உள்ளது தான் ''த்வம்'' (நீ) என்கிற பதத்தினால் குறிக்கப்படுவது.

      [தேஹாதிகள் ஜடமாகவும் மாறுதலுள்ளவையாகவும் இருக்கும். தன்மை யுள்ளவை. ஆத்மா ஞான ஸ்வரூபமாய் எவ்வித மாறுதலும் அற்றது. மாறுதல் ஆறுவிதம். அவையாவன: பிறவி (உண்டாவது), இருப்பு (வெளிப்படத் தோன்றுவது), வளர்ச்சி, உருமாற்றம், குறைவு, நாசம்.]

த்வமர்த2- மேவம் நிச்சித்ய தத3ர்த2ம் சிந்தயேத் புந: |

அதத்3-வ்யாவ்ருத்தி ரூபேண ஸாக்ஷாத் விதி4முகே2ந ச ||                     28

      இவ்விதமாக'' த்வம்'' (நீ) என்கிற பதத்தின் அர்த்தத்தைத் தீர்மானம் செய்து கொண்டு பிறகு ''தத்'' (அது) என்கிற பதத்தின் அர்த்தத்தை, எது "அது'' அல்லவோ அதிலிருந்து விலக்கிக்காட்டும் முறையாகவும், நேராகவே விதித்துக் காட்டும் முறையாகவும் சிந்திக்க வேண்டும்.

[இதுவரை "த்வம்'' – “நீ'' என்பதால் குறிப்பிடப்படும் ஜீவனுடைய ஸ்வருபத்தை சொல்லிவிட்டு இனி "'தத்'''' அது'என்னும் பிரஹ்மத்தின் ஸ்வ ரூபத்தைப்பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். ஜீவனைப்பற்றிச் சொல்லும் போது ஜீவனுடைய ஸ்வ ரூபத்தில் தேஹம் முதலான வைகள் சேராததினால் அவைகளை விலக்கி, சுத்தமான சைதன்ய ஸ்வரூபமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று இருவிதமாகவும் வர்ணித்ததுபோலவே, எதெல்லாம் பிரஹ்மமில்லையென்று தெரிந்து கொண்டு, பிரஹ்மத்தின் ஸ்வரூபம் எத்தகையது என்று இரு விதமாகவும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதைக் காட்டுகிறார். விலக்கிக் காட்டும் முறையை அடுத்துவரும் 29 - வது சுலோகத்திலும், குறிப்பிட்டுக்காட்டும் முறையை அதற்கடுத்த 30 - வது சுலோகத்திலும் கண்டிருக்கிறார்.]

நிரஸ்தாசேஷ-ஸம்ஸார-தோ3ஷோ(அ)ஸ்தூ2லாதி3லக்ஷண: |

அத்3ருச்யத்வாதி3-கு3ணக: பராக்ருத-தமோமல: ||                               29

நிரஸ்தாதிசயாநத்த3 ஸத்ய: ப்ரஜ்ஞாந-விக்3ரஹ: |

ஸத்தா-ஸ்வலக்ஷண: பூர்ண: பரமாத்மேதி கீ3யதே ||                           30

      ஸம்ஸார தோஷங்கள் யாவும் இல்லாதவராய், 'ஸ்தூலமாக இருப்பவரில்லை, என்பது முதலியவைகளை லக்ஷணமாக உள்ளவரால், பார்க்கப்படும் தன்மை முதலான குணங்கள் இல்லாதவராய், அஞ்ஞானமாகிற அழுக்கை விலக்கினவராய் (29), எதற்கு மேல் ஆனந்தம் கிடையாதோ அவ்வித ஆனந்த ஸ்வரூபியாய், ஸத்யஸ்வபாவமுடையவராய், ஞான ஸ்வரூபியாய், இருப்பு என்பதையே தன் லக்ஷணமாக உடையவராய், நிறைந்தவராய் இருப்பவர் பரமாத்மா என்று சொல்லப்டுகிறார் (30).

ஸர்வஜ்ஞத்வம் பரேசத்வம் ததா2 ஸம்பூர்ண-சக்திதா |

வேதை3: ஸமர்த்2யதே யஸ்ய தத்3-ப்3ரஹ்மேத்யவதா4ரய ||                    31

      எவருக்கு எல்லாவற்றையும் அறியும் தன்மை, மற்றதையெல்லாம் ஆளும் தன்மை, அப்படியே பரிபூர்ணமான சக்தியோடு கூடியவராய் இருத்தல் - இவை யெல்லாம் வேதவாக்கியங்களினால் பொருத்தப்படுகிறதோ, அதுவே (அவரே) பிரஹ்மம் என்று நன்கு தெரிந்து கொள்.

யஜ்-ஜ்ஞாநாத் ஸர்வவிஜ்ஞாநம் ச்ருதிஷு ப்ரதிபாதி3தம் |

ம்ருதா3த்3யநேக-த்3ருஷ்டாந்தைஸ்-தத்3-ப்3ரஹ்மேத்யவதா4ரய ||                32

  "எதை அறிவதனால் எல்லாவற்றையும் அறிந்ததாக ஏற்படுமோ'' என்று மண் முதலான பல வித உதாரணங்களால் வேத வாக்கியங்களில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அதுவே பிரஹ்மம் என்று தீர்மானித்துக்கொள்.

 [காரணமான மண்ணை அறிந்துவிட்டால் அதனால் செய்யப்பட்ட குடம் முதலானவைகளெல்லாம் மண்தான் என்று எப்படி அறியப்பட்டு விடுகிறதோ அதே மாதிரியாக ஜகத்தில் இருப்பதாகத் தோன்றும் ஸகல பதார்த்தங்களும் இருப்பையே ஸ்வ ரூபமாயுடைய பிரஹ்மத்தினாலேயே செய்யப்பட்டிருக்கின்றன என்று அறிந்து விடலாமென்று சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.]

யதா3நந்த்யம் ப்ரதிஜ்ஞாய ச்ருதிஸ்-தத்-ஸித்34யே ஜகெ3 |

தத்-கார்யத்வம் ப்ரபஞ்சஸ்ய தத்3 ப்3ரஹ்மேத்யவதா4ரய ||                     33

      எதனுடைய எல்லையற்ற தன்மையை வேதமானது பிரதிக்ஞை செய்துவிட்டு அந்த எல்லையற்ற தன்மை ஸித்திப்பதற்காக பிரபஞ்சத்திற்கு அதனாலேயே ஏற்பட்டது என்ற தன்மையைச் சொல்லிற்றோ, அதுவே பிரஹ்மம் என்று தீர்மானித்துக்கொள்.

விஜிஜ்ஞாஸ்யதயா யச்ச வேதா3ந்தேஷூ முமுக்ஷபி4: |

ஸமர்த்2யதே(அ)தியத்நேந தத்3-ப்3ரஹ்மேத்யவதா4ரய ||                        34

 எது மோக்ஷத்தில் இச்சையுள்ளவர்களால் நன்கு அறியப்பட வேண்டியதாக உபநிஷத்துக்களில் வெகு தீவிரமாக வற்புறுத்தப்படுகிறதோ, அதுவே பிரஹ்மம் என்று தீர்மானமாகத் தெரிந்து கொள்.

ஜீவாத்மநா ப்ரவேசச்ச நியந்தருத்வம் ச தாந்-ப்ரதி |

ச்ரூயதே யஸ்ய வேதே3ஷு த்த்3-ப்3ரஹ்மேத்யவதா4ரய ||                       35

   எதற்கு ஜீவரூபமாக பிரவேசமும், அந்த ஜீவர்கள் விஷயமாய் நியமனம் செய்யும் தன்மையும் வேதங்களில் காண்கிறதோ அதுவே பிரஹ்மம் என்று தீர்மானித்துக்கொள்.

    [சரீரத்தை ஸ்ருஷ்டி செய்த பரமாத்மாவேதான் ஜீவன் என்ற பெயருடன் அதற்குள் நுழைந்தார் என்று உபநிஷத் வாக்கியம் ஸ்பஷ்டமாகச் சொல்லி யிருப்பதால் ஜீவனுக்கும் பிரஹ்மத்திற்கும் ஸ்வருபத்தில் பேதம் கிடையாது. சுத்த ஸ்வரூபத்தை விட்டு வியாவஹாரிக தசையில் அவ்விரண்டும் வெவ்வேறு என்று வைத்துக்கொண்டால், ஜீவன் நியமிக்கப்படுகிறவனாகவும், பிரஹ்மம் நியமனம் செய்கிறதாகவும் ஆகும். அந்த நியமனம் எவ்விதமென்று அடுத்த சுலோகத்தில் விளக்குகிறார்.]

கர்மணாம் ப2ல-தா3த்ருத்வம் யஸ்யைவ ச்ரூயதே ச்ருதௌ |

ஜீவாநாம் ஹேது கர்த்ருத்வம் தத்3-ப்3ரஹ்மேத்யவதா4ரய ||                    36

     ஜீவர்களுடைய புண்ணிய பாப கர்மாக்களுக்கும் பலனைக் கொடுப்பவரா யிருக்கும் தன்மையும், அவர்களுக்குக் கர்மாக்களைச் செய்யும்படி செய்கிறவரா யிருக்கும் தன்மையும், எவருக்கே உண்டென்று வேதத்தில் காண்கிறதோ அதுவே பிரஹ்மம் என்று தீர்மானித்துக்கொள்.

  [ஜீவர்களிடத்தில் கர்த்ருத்வம், போக்த்ருத்வம், அதாவது கர்மாக்களைச் செய்யக் கூடிய தன்மையும், கர்மாக்களின் பலனான ஸுக துக்கங்களை அனுபவிக்கக்கூடிய தன்மையும் இருப்பதாக எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் அந்த இரு விதத் தன்மைகளும் ஜீவர்களுக்குத் தம்மால் ஏற்பட்டதில்லை. அவ்விதம் இருந்தால், தான் நினைத்தபடியெல்லாம் செய்யவேண்டும், வேண்டிய ஸுகத்தை மாத்திரம் அனுபவிக்கவும், வேண்டாத துக்கத்தை அனுபவிக்காம லிருக்கவும் ஸ்வாதந்திரியம் இருக்க வேண்டும். இவை வாஸ்தவத்தில் இல்லை யென்பது ஸகல ஜீவர்களுக்கும் அனுபவ ஸித்தம். ஆகையால் கர்மாவைச் செய்வதிலேயும், பலனை அனுபவிப்பதிலேயும் ஜீவர் பராதீனம் என்று தெரிகிறது. யாருக்குப் பராதீனம் என்ற கேள்வி ஏற்படும். எவருடைய அனுக்ரஹத்தினால் கர்மாக்களைச் செய்யும சக்தியும், பலன்களை அனுபவிக்கும் சக்தியும் ஜீவர்களுக்கு ஏற்படுகிறதோ அதாவது ஜீவர்கள் கர்மாவைச் செய்வதற்கு எவர் உதவுகிறாரோ, எவர் செயலுக்குத் தக்கபடி ஸுக துக்கங்களைக் கொடுக்கிறாரோ அப்படிப் பட்டவரான பிரஹ்மத்துக்குத்தான் பராதீனம் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

 (இதுவரை சொன்ன ப்ரஹ்மமானதத்'' லக்ஷணத்தில், மாயா ஸம்பந்த மற்ற, காரியமற்ற'நிர்குண ப்ரஹ்மம்'மட்டுமின்றி, அதுவே மாயையோடு கூடி ஈச்வரனாகக் காரியம் செய்யும்'ஸகுண ப்ரஹ்ம'நிலையும் சேர்த்துப் பேசப்பட்டிருக்கிறது.]

தத்-த்வம் பதா3ர்தெ3ள நிர்ணீதௌ வாக்யார்த2ச்சிந்த்யதே(அ)து4நா |

தாதாத்ம்ய–மத்ர வாக்யார்த2ஸ்-தயோரேவ பதா3ர்த2யோ: ||                    37

     [“தத்'', “தவம்'' இரண்டும் விளக்கப்பட்டு விட்டதால் இனி'' அஸி'' (இருக்கிறார்) என்பது ஜீவ - ப்ரம்ம ஐக்யத்தைக் குறிப்பதை விளக்குகிறார்.)

      "தத்" (அது) "த்வம்'' (நீ) என்கிற இரண்டு பதங்களுடைய அர்த்தங்கள் நிர்ணயிக்கப்பட்டு விட்டன. இப்பொழுது அப்பதங்கள் சேர்ந்த வாக்கியத்தின் அர்த்தம் சிந்திக்கப்படுகிறது. அந்த இரண்டு பதங்களின் அர்த்தங்களுக்குமே (அவை) ஒரே ஸ்வரூபமாயிருக்கும் தன்மை இங்கு வாக்கியத்தின் அர்த்தம்.

      [முன் 10 - ஆவது சுலோகத்தில், பதங்களுடைய அர்த்தம் நன்கு தெரிந்து விட்டதால், அப்பதங்கள் சேர்ந்து உண்டாயிருக்கிற வாக்கியத்தின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள முடியுமென்று சொன்னதையனுஸரித்து இதுவரை "தவம்" "தத்”: என்கிற பதங்களின் அர்த்தத்தை விளக்கிவிட்டபடியால், இனி வாக்கியத் தின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டுவிடலாமென்று ஏற்படுகிறது. ஆனால் இந்த மஹா வாக்கியத்தில், இரண்டு பதங்களின் அர்த்தங்களான ஜீவனுக்கும் பிரஹ்மத்திற்கும் அபேதம் சொல்வதாக " அஸி'' (இருக்கிறாய்) என்ற பதத்தினால் தெரிகிறது. வெவ்வேறான லக்ஷணங்களோடு கூடின இரண்டு பதார்த்தங்கள் வெவ்வேறாக இருப்பது தான் நியாயமே தவிர, இரண்டும் ஒன்று தான் என்பது எப்படி என்று ஸந்தேஹம் ஏற்படுவதால் அதைக் கொஞ்சம் விவரிக்கவேண்டி வருகிறது.]

ஸம்ஸர்கோ3 வா விசிஷ்டோ வா வாக்யார்தோ3 நாத்ர ஸம்மத: |

அக2ண்டைக ரஸத்வேந வாக்யார்தோ2 விது3ஷாம் மத: ||                     38

      இந்த இடத்தில் ஸம்ஸர்க்கமாவது, விசிஷ்டமாவது வாக்கியத்தின் அர்த்தமாக ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. அகண்டமாய் ஏரஸமாயிருப்பதே வாக்கியத்தின் அர்த்தமென்பது தான் வித்வான்களுக்கு ஸம்மதமாகும்.

      [ஒரு பதார்த்தத்தைப்பற்றிச் சொல்லவேண்டுமானால் ஐந்து விதமாகத்தான் சொல்ல முடியுமென்று வித்வான்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.

            1.     ஜாதி     - அது இந்த இனத்தைச் சேர்ந்தது: ராமர் க்ஷத்திரியர்.

      2.     குணம்   - அதற்குள்ள ஏதேனும் குணத்தைக் குறிப்பிடுவது:                              ராமர் உதாரமாயிருப்பவர்.

      3.     கிரியை - அதற்குள்ள ஏதேனும் கிரியையைக் குறிப்பிடுவது: ராமர்                        ஸ்வதர்மத்தை அனுஷ்டிப்பவர்.

      4.     ஸம்பந்தம் - அதற்கும் வேறு பதார்த்தத்திற்கும் உள்ள ஸம்பந்தத்தைக்                   கூறுதல்: ராமர் தசரத புத்திரன்.

      5.     ஸம்ஜ்ஞை - அதற்கு வைக்கப்படும் பெயர்: இவர் ராமர் என்ற                            பெயருடையவர்.

      இவ்வைந்தில் ஸம்ஜ்ஞை என்பது வியவகாரத்திற்காகக் கல்பிக்கப்பட்டிருப்பதால் அதற்கு அர்த்தத்தில் தாத்பர்யமில்லை - ஜாதி, குணம், கிரியை இவைகளைச் சொல்லும் சப்தங்களின் அர்த்தம் அந்தப் பதார்த்தத்தினிடத்தில் அன்வயித்துக்கொண்டு, அதை மற்ற பதார்த்தங்களிலிருந்து விலக்கிக் காட்டுவதால் அவைகளை விசேஷணம் என்று சொல்வார்கள். விசேஷ முள்ளதே விசிஷ்டம். அப்பதார்த்தத்தில் ஒட்டாமல் வேறு பதார்த்தத்திற்கும் அதற்குமுள்ள ஸம்பந்தத்தைச் சொல்லி விளக்குகிற ஸம்பந்தம் என்கிற நான்காவது முறையை ஸம்ஸர்க்கம் என்பார்கள். பிரஹ்மமென்பது ஏகமாகவேயிருப்பதால் அதில் ஜாதியைச் சொல்லும் சப்தத்திற்கு இடமில்லை; நிர்குணமாயிருப்பதால், நிஷ்கிரியமாயிருப்பதால் கிரியா வாசக சப்தத்திற்கும் இடமில்லை; ஆகையால் இவை யாவும் பிரஹ்மத்திற்கு விசேஷணமாகாததினால் பிரஹ்மத்தைத் விசிஷ்டமென்று சொல்வதற்கில்லை. பிரஹ்மத்தைத் தவிர வேறு பதார்த்தமே கிடையாததினால் இன்னொரு பதார்த்தத்தின் ஸம்பந்தத்திற்கும் இடமில்லை; ஆகையால் ஸம் ஸர்கத் திற்கும் வழியில்லை. ஸம்ஜ்ஞை என்பது வெறும் கல்பிதமான பெயரானதினால் அதை மாத்திரம் சொல்லி பதார்த்தத்தை விளக்க முடியாது. இவ்விதமாக சாதாரணமாகச் சொல்லக் கூடிய ரீதியில் எவ்வகையிலும் பிரஹ்மத்தைச் சொல்ல முடியாமலிருக்கிறது. ஆனால் உபநிஷத்திலோ'நீ'' என்கிற சப்தத்தையும் ''அது'' என்கிற சப்தத்தையும் சேர்த்து ஒன்றுபடுத்தி வாக்கியம் சொல்லப் பட்டிருக்கிறது. அதற்கு என்ன தாத்பர்யம் என்றால், 'நீ', என்ற சப்தத்தால் குறிக்கப்படும் அர்த்தத்தில்'நீ'' என்கிற அம்சத்தை விட்டு விட்டும் இரண்டு பதார்த்தங்களிலும் மிஞ்சுகிறதான, இரண்டிற்கும் பொதுவான, வேற்றுமையற்ற ஒரே விதமாயுள்ள, சைதன்யத்தையே கிரஹித்தால், அப்பொழுது தான் வாக்கியம் சரியான அர்த்தத்தைக் கொடுக்கும். அவ்விதம் அர்த்தம் செய்வதின் பிரகாரத்தை மேல் சுலோகங்களில் காட்டுகிறார்.]

ப்ரத்யக்3-போ3தோ4ய ஆபா4தி ஸோ(அ)த்3வயாநந்த2-லக்ஷண: |

அத்3வயாநந்த3- ரூபச்ச ப்ரத்யக்3-போ3தை4க-லக்ஷண: ||                         39

      உள்ளிருக்கும் ஞான ஸ்வ ரூபியாக எவர் பிரகாசிக்கிறரோ, அவரே இரண்டற்று ஆனந்தமாயிருக்கும் தன்மை உள்ளவர். இரண்டற்று ஆனந்தமா யிருக்கும் தன்மை உள்ளவர்தான், உள்ளிருக்கும் ஞானமே ஸ்வரூபமாயுள்ளவர்.

      [உள்ளேயிருப்பதாகத் தோன்றும் ஜீவசைதன்யமும், இரண்டற்று வியாபகமாயுள்ள பிரஹ்ம சைதன்யமும் ஒன்று தான். மோதிரம் தங்கம் என்று சொல்லலாம்; ஆனால் தங்கம் மோதிரம் என்று சொல்லமுடியாது. அதுமாதிரி இங்கே யில்லையென்று காட்டுவதற்காக, இரண்டற்று வியாபகமாயுள்ள பிரஹ்மசைதன்யமேதான் உள்ளேயிருப்பதாகத் தோன்றும் ஜீவசைதன்யமும் என்று மாற்றியும் உபதேசிக்கிறார்.]

இத்2த-மந்யோந்ய-தாதா3த்ம்ய-ப்ரதிபத்திர்-யதா34வேத்

அப்3ரஹ்மத்வம் த்வமர்த2ஸ்ய வ்யாவர்தேத ததை3வ ஹி ||                  40

தத3ர்த2ஸ்ய ச பாரோக்ஷ்யம் யத்3யேவம் கிம் தத: ச்ருணு |

பூர்ணாநந்தை3 கரூபேண ப்ரத்யக்3-போ3தோ4(அ)வதிஷ்ட2தே ||                 41

      இவ்விதமாக ஜீவனுக்கும், பிரஹ்மத்திற்கும் ஒருவருக்கொருவர் உள்ள ஒரே தன்மையின் ஞானம் எப்பொழுது ஏற்படுமோ, அப்பொழுதே த்வம்'(நீ) என்பதன் அர்த்தமான ஜீவனுக்கு ப்ரஹ்மமாயிருக்கும் தன்மை இல்லை என்பது விலகிவிடும். அப்படியே'தத்'(அது) என்பதன் அர்த்தமான பிரஹ்மத்திற்கு நேரில் தெரியாத தன்மை உள்ளது என்பதும் விலகிவிடும். இவ்விதம் விலகினதே பாஜல் அதிலிருந்து என்ன கிடைக்கிறது? சொல்கிறேன்; கேள்! உள்ளிருக்கும் ஞான ஸ்வரூபம் பரிபூர்ணமான ஆனந்த ஸ்வரூபமாகவே இருந்துவிடும். (தெரிந்துவிடும்.)

தத்-த்வமஸ்யாதி3-வாக்யம் ச தாதா3த்ம்ய ப்ரதிபாத3னே

லக்ஷ்யௌ தத்-த்வம் பதா3ர்தெ2ள த்3வாவுபாதா3ய ப்ரவர்ததே ||               42

  “தத் த்வம் அஸி'' முதலான வாக்கியங்கள் ஜீவனுக்கும் - பிரஹ்மத்திற்கும் ஒற்றுமையை எடுத்துச்சொல்லும் விஷயத்தில்'தத்'த்வம் (அது, தி) என்ற பதங்களின் அர்த்தமாக இரண்டு லக்ஷ்யார்த்தங்களையும் தான் எடுத்துக் கொண்டு பிர விருத்திக்கின்றன.

  [ஒரு பதத்திற்கு அர்த்தம். இருவகைப்படும் வாச்யார்த்தம், லக்ஷ்யார்த்தம் என்று. அந்தப் பதத்திற்கு சாதாரணமாக ஏற்பட்ட அர்த்தம் வாச்யார்த்தம் எனப்படும். மாட்டைப் பார்த்து மாடு என்று சொல்வதுபோல், சாதாரணமாக ஏற்பட்ட அர்த்தம் பொருந்தாத போது, அந்தப் பதத்தினால் குறிக்கப்படும் அர்த்தம் லக்ஷ்யார்த்தம் எனப்படும். மனுஷ்யனைப்பார்த்து மாடு என்று சொன்னால் அவன் மாடாக இல்லை என்பது நன்கு தெரிகிறபடியால், அவனிடம் மாட்டின் தன்மையான புத்தியின்மையோ, முரட்டுத்தன மோ இருக்கிறதென்று அர்த்தம் செய்து கொள்வது போல். இவ்விடத்தில் ''அது'', ''நீ'' என்கிற பதங்களுக்கு தாதராணமாயுள்ள வாச்யார்த்தத்தை எடுத்துக்கொண்டால் அவ்விரு பதங்களின் அர்த்தங்களுக்கும் அபேதம் இருக்க முடியாததனால் சைதன்யமென்ற லக்ஷ்யார்த்தையே எடுத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது. இப்படியே மற்ற வாக்கியங் நிலம் வாச்யார்த்தத்தை விட்டு லக்ஷ்யார்த்தத்தையே கிரஹிக்க வேண்டும். பார்த்தத்தையே கிரஹிக்க வேண்டுமென்ற விஷயத்தை இந்த சுலோகத்தில் சொல்லிவிட்டு வாச்யார்த்தத்தை விட வேண்டுமென்பதை அடுத்த சுலோகத்தில் சொல்லுகிறார்.]

ஹித்வா த்3வௌ சப3ளௌ வாச்யௌ வாக்யம் வாக்யார்த2-போ34நே |

யதா2 ப்ரவர்ததே(அ)ஸ்மாபி4ஸ்-ததா2 வ்யாக்2யாத-மாத3ராத் ||                 43

      மஹா வாக்கியமானது, வாக்கியத்தின் அர்த்தத்தை போதிப்பதில் எந்தப் பிரகாமாக வாச்யார்த்தங்களான கலந்துள்ள தத்வங்கள் இரண்டையும் விட்டு வர்த்திக்கிறதோ, அந்தப் பிரகாரமாக எங்களால் கவனத்துடன் வியாக்யானம் செய்யப்பட்டது.

      [வாச்யார்த்தம் சித்தமான தத்வமல்லவாதலால் கலப்பு என்று அதைக் குறிப்பிட்டு, சுத்த தத்வததைக கலப்புள்ளதாகச் செய்த அம்சங்களை விலக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அந்த அம்சங்கள் "த்வம்" (நீ) என்கிற பதத்தின் அர்த்தத்தில் எவையென்பதை அடுத்த சுலோகத்திலும், “தத்” (அது) என்கிற பதத்தின் அர்த்தத்தில் எவையென்பதை அதற்கடுத்த சுலோகத்திலும் விவரித்துச் சொல்லுகிறார்.]

ஆலம்ப3நதயா பா4தி யோ(அ)ஸ்மத் ப்ரத்யய சப்த4யோ: |

அந்த: கரண ஸம்பிந்த போத4: ஸ த்வம்பதா3பி44: ||                           44

      எது நான்'' என்கிற எண்ணத்திற்கும், 'நான்' என்கிற சப்தத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறதோ, அந்த அந்தக்கரணத்துடன் கலந்துள்ள அறிவே "த்வம்'' (நீ) என்கிற பதத்தினால் சொல்லப்படுவது.

     [உலகத்தில் சாமான்யமாக எல்லோரும் இங்குநீ'' எனப்படும் ஜீவனை "நான், நான் என்று சொல்கிறார்கள். அவ்விதம் உபயோகிக்கும் போது "நான் பார்க்கிறேன். கேட்கிறேன்" என்று சொல்லும் போது இந்திரியங்களையும், ''நான் பருமனாக இருக்கிறேன், இளைத்திருக்கிறேன்" என்று சொல்லும் போது தேஹத்தையும், ''நான் இன்புறுகிறேன், துன்புறுகிறேன்என்னும் போது மநோ புத்திகளையும் நான் என்பதின் அர்த்தத்தில் சேர்த்துவிடுகிறார்கள். ஆனால் இப்படிக் குறிப்பிடுகையில் அந்தக்கரணம், இந்திரியங்கள், தேஹம் இவையெல்லாம் ஜடமாயிருப்பதால் இவைகளுக்கு அறிவு கிடையாது. சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாவின் சம்பந்தத்தினாலேயே இவை சேஷ்டிக்கின்றன. ஆகையால் நாம் சாதாரணமாய் ''நீ'' என்கிற பதத்தினால் சுத்தமான சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாவையும், ஜட ஸ்வரூபமான தேஹாதிகளாகிற அனாத்மாக்களையும் சேர்த்தே கலந்து விவரிக்கிறோம். இவ்விதம் நீ என்ற சப்தத்தினால் சாமான்யமாய்ச் சொல்லப்படுவது சுத்த ஆத்மாவல்ல. கலப்பு ஆத்மாதான்.]

மாயோபாதி4ர்-ஜக3த்3யோநி: ஸர்வஜ்ஞத்வாதி3-லக்ஷண: |

பாரோக்ஷ்ய-சப3ள: ஸத்யாத்3மக-ஸ்தத்-பதா3பி44: ||                            45

      மாயையே உபாதியாய் உடையதாயும், ஜகத்திற்குக் காரணமாயும், ஸர்வக்ஞத்வம் முதலான துகளை லக்ஷணமாக உள்ளதாயும், பிரத்யக்ஷமல்லாதது என்று தோன்றக்கூடிய கல்ப்புள்ள தாயும், ஸத்யமாயிருக்கும் தன்மை முதலானவைகளை ஸ்வ ரூபமாய்க் கொண்டதாயும் இருப்பது 'தத்' (அது) என்கிற பதத்தினால் சொல்லப்படுவது.

  [முந்தின சுலோகத்தில் கலப்புள்ள "நீயை வர்ணித்துவிட்டு இந்த சுலோகத்தில் கலப்புள்ள "அதுவை வர்ணிக்கிறார். 'தத்' (அது) என்கிற பதத்தின் அர்த்தம் ஸத்யமாயும்; ஞானமாயும், அனந்தமாயும் ஆனந்தமாயும் உள்ள சுத்த சைதன்யமேயாகும். ஞான ஸ்வரூபமாய் ஸ்வயம் பிரகாசமாயிருக்கும் இவ்வஸ்து உண்டா இல்லையா என்று இல்லையா என்று கூட சந்தேகமேற்படும்படி மறைந்து பிரத்யக்ஷமாய் அறியக்கூடாததுபோல் ஆகிவிட்டது. இதுவே அதிலுள்ள கலப்பு. இவ்விதம் ஏற்பட்டதற்குக் காரணம் என்னவென்றால் மாயை என்பது இவ்வஸ்துவிற்கு உபாதியாக ஏற்பட்டது. பிரஹ்மத்தினிடமிருப்பதாகத் தோன்றும் மாயா சக்தியினாலேயே பிரஹமம் மறைபட்டுவிடுகிறது. பிரஹ்மம் மறைபட்டதுடன் நிற்காமல் மாயையான ஜகத்தையும் தோன்றும்படிச் செய்கிறது. ஒருவித மாறுதலையும் அடையாமல் ஏகரூபமாயிருக்கும் கயிறு எப்படி அதில் தோன்றும் பாம்புக்குக் காரணம் என்று விவரிக்கப்படுகிறதோ, அப்படியே தான் பிரஹ்மத்தை ஜகத்திற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும். பாம்பு கயிற்றிலிருந்து உண்டானது மாத்திரம் அல்ல, அது இருப்பதும் கயிற்றின் இருப்பினால் தான். அது மறைவதும் கயிற்றிற்குள் தான். இவ்விதமாக பாம்பின் உத்பத்தி, ஸ்திதி, லயம் எல்லாவற்றிற்கும் காரணமாயிருப்பது கயிறே. அப்படியேதான் ஜகத்தின் உத்பத்தி, ஸ்திதி, லயம் இவைகளுக்குக் காரணமா யிருப்பது பிரஹ்மமே. ஜகத்தில் உள்ள அனந்த வைசித்திரியங்களுக்கும் காரண மாயிருக்கும் பிரஹ்மம் ஸர்வக்ஞனாயிருந்தே தீரவேண்டும். எல்லாவற்றையும் அறிந்திருந்தால் மாத்திரம் போதாது. தோன்றினதையெல்லாம் கார்யத்தில் நிறைவேற்றுவதற்கு வேண்டிய சாமர்த்தியமுள்ளவராக இருக்கவேண்டும். ஆகையால் அவர் ஸத்ய ஸங்கல்பராயும், ஸர்வசக்தராயும் இருந்தாக வேண்டும். அப்பதார்த்தங்களை விட்டு விலகியிராமல் அவைகள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டியதால் ஸர்வ வியாபகமாகவும் இருந்தாக வேண்டும். இவ்விதமாக பிரஹ்மத்தை ஜகத் காரணமென்று வைத்துக்கொண்டால், அப்பிரஹ்மத்திற்கு ஸர்வக்ஞத்வம் ஸத்ய ஸங்கல்பத்வம், ஸர்வசக்தத்வம், ஸர்வ வியாபகத்வம் முதலானவைகளெல்லாம் உண்டென்றே சொல்லவேண்டும். ஆனால் இவை யாவும் ஜகத்காரணமாக பிரஹ்மத்தை நினைக்கும் போதுதான் உண்டு. ஜகத் காரணமாக பிரஹ்மம் தோன்றுவது மாயையை உபாதியாக அடைந்ததினால் தான். மாயையினாலேயே பிரத்யக்ஷமில்லாத வஸ்துவாகத் தோன்றுகிறது. இவ்விதமாகப் பலவிதக் கலப்போடு கூடியதும், ஆனால் வாஸ்தவத்தில் ஸத்ய ஞானானந்த ஸ்வரூபமாயுமுள்ள வஸ்து எதுவோ அதுவே ''தத்'' (அது) என்கிற பதத்தினால் சாதார்ணமாகச் சொல்லப்படுகிறது. முன் சுலோகத்தில் 'த்வம்'' பதத்தின் வாச்யார்த்தத்தையும், இந்த சுலோகத்தில்தத்'' பதத்தின் வாச்யார்த்தத்தையும் வர்ணித்து விட்டு அவ்வர்த்தங்களை அப்படியே வைத்துக்கொண்டால், இரண்டிற்கும் அபேதம் சொல்வது சாத்தியமில்லை என்பதை அடுத்த சுலோகத்தில் விளக்குகிறார்.]

ப்ரத்யக்-பரோக்ஷதைகஸ்ய ஸத்3விதீயத்வ-பூர்ணதா |

விருத்4யதே யதஸ்-தஸ்மாத் லக்ஷணா ஸம்ப்ரவர்ததே ||                      46

      ஒரே பதார்த்தத்திற்கு உள்ளே இருந்து பிரத்யக்ஷ மாயிருப்பதும், வெளியில் இருந்து பிரத்யக்ஷமில்லாமலிருப்பதும் (அப்படியே) இரண்டாவதுள்ள தாயும் பரிபூர்ணமாயும் இருப்பதும், பரஸ்பரம் விரோதமாயிருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் லக்ஷணையானது ஏற்படுகிறது.

  [44வது ஸ்லோகத்தில் ஜீவனுடைய ஸ்வபாவத்தைச் சொல்லும் போது அந்தக்கரணத்துடன் கலந்தவனென்று சொன்ன படியால் தேஹாதிகளுக் கெல்லாம் உள்ளேயிருப்பவன் என்றும், பிரதிப் பிராணிக்கும் தனித்தனியே அந்தக்கரணமிருப்பதால் ஜீவர்கள் அநேகர் என்றும், நான் நான் என்று பிரகாசிக்கிறவன் என்றிருப்பதால் அவனையறிவதற்கு வேறு பிரமாணம் தேவை யன்னியில் ஸ்வயம் பிரகாசமாயிருப்பவன் என்றும், அத்தக்கரணமென்ற வரம்புக் குட்பட்டுவிட்டபடியால், ஜீவனுடைய ஞான மோ - சக்தியோ – ஆனந்தமோ எல்லாம் சுருங்கி விட்டனவென்றும். சொல்லப்பட்டதாக ஆகிறது. அடுத்த சுலோகத்தில் பிரஹ்மம் ஜகத் காரணமென்றும், வியாபக மாயும் – ஏகமாயுமுள்ள மாயையையே உபாதியாக உடையதென்றும், ஸத்ய ஞானானந்த ஸ்வரூபமாயும். ஸர்வக்ஞனாயும், ஸர்வசக்தனாயும், ஸர்வ வ்யாபகனாயும் இருக்கும் தன்மை யுடையது என்று ஜீவல க்ஷணங்களுக்கு நேர் விருத்தமான லக்ஷணங்களையுடைய தென்று சொல்லப்பட்டது. இவ்விதம் நேர் விருத்தப்பட்ட இரண்டு பதார்த்தங்களும் வாஸ்தவத்தில் ஒன்று தான் என்று எப்படிச் சொல்லமுடியுமென்கிற ஸந்தேஹம் வருவது ஸஹஜம் தான். வேற்றுமைப்படுத்தக்கூடிய லக்ஷணங்களுக்கே பிர தான்யம் கொடுத்துக் கொண்டு, இரண்டிற்கும் ஐக்கியத்தை ஸாதிப்பது ஸாத்தியமேயில்லை என்பதை ஒப்புக்கொண்டு அந்த வேறுபட்ட லக்ஷணங்களுக்குப் பிரதான்யம் கொடுக்காமல் அவ்விரண்டு பதார்த்தங்களிலும் பொதுவாயுள்ள சைதன்யாம் சத்தை மட்டும் எடுத்துக்கொண்டால்தான் ஐக்கியம் ஸித்திக்கும். ஆதலால் வாச்யார்த்தத்தை விட்டு விட்டு லக்ஷ்யார்த்தத்தைத்தான் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதை இத்த சுலோகத்தில் எடுத்துக் காட்டுகிறார்.]

மாநாந்தர விரோதே4 து முக்2யார்த2ஸ்யாபரிக்3ரஹே |

முக்2யார்தே2நாவிநாபூ4தே ப்ரதீதிர் லக்ஷணோச்யதே ||                        47

    வேறு பிரமாணங்களுக்கு விரோதம் ஏற்படும் போது, முக்கியமான அதாவது வாச்சியமான அர்த்தத்தை எடுத்துக்கொள்ள முடியாத நிலைமையில், வாச்சி யார்த்தத்திலிருந்து விலகாமலிருக்கிற அர்த்தத்தில், தோன்றுவது லக்ஷணை என்று சொல்லப்படுகிறது.

   [லக்ஷ்யார்த்தத்தில் லக்ஷணை மூன்றுவிதமாக இருக்கும். வாச்யார்த்தத்தில் ஒரு அம்சத்தை மாத்திரம் விடுகிறதில்லாமல் முழுவதையும் விட்டு விட்டு அவ்வர்த்தத்தோடு ஸம்பந்தப்பட்ட வேறு அர்த்தத்தைக் குறிப்பது: ''கங்கையில் காசீ நகரம் இருக்கிறது'' என்பதில் கங்கை என்ற சப்தத்தின் வாச்சியார்த்தமான கங்கா பிரவாஹத்தை விட்டு ''கங்கைக்கரை'' என்று அதன் ஸம்பந்தமுடைய ஒன்றை அர்த்தமாகச் சொல்வது; இது ஒரு விதம். வாச்சியார்த்தத்தில் இல்லாத ஒரு அம்சத்தைச் சேர்த்துக்கொண்டு அர்த்தமாகச் சொல்வது: ''சிவப்பு ஓடுகிறது'' என்பதில் சிவப்பு என்ற சப்தம் வர்ணத்தைக் குறிக்குமே தவிர, ஒரு பதார்த்தத்தைக் குறிக்காது; வர்ணமோ தனியாக ஓடாது. ஆகையால் ''சிவப்புக் குதிரைஎன்ற மாதிரி 'குதிரை' என்ற ஒன்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டி வருகிறது; இது இன்னொரு விதம். மூன்றாவது விதத்தில் வாச்சியார்த்தத்தை முழுவதும் விட்டு விடுவதும் கிடையாது. முழுவதையும் அப்படியே வைத்துக்கொள்வதும் கிடையாது: "அவன் தான் இவன்என்பதில் ''அவன்'' என்ற சப்தம் வேறு இடத்திலோ, காலத்திலோ இருந்தவனைக் குறிக்கும்; "இவன்'' என்ற சப்தம் தற்போது உள்ள இடத்திலும் காலத்திலும் இருப்பவனைக் குறிக்கும்; இங்கு தேசமும், காலமும் விரோதப் படுகிறபடியால் அவைகளை விலக்கி இரண்டு பதங்களிலும் பொதுவாய்த் தெரிகிற மனிதனை மாத்திரம் எடுத்துக்கொண்டால் தான் வாக்கியம் சரியானபடி அர்த்தம் செய்ய முடியும். இம்மூன்றுவித லக்ஷணைகளில் மூன்றாவதானதே "தத் த்வம் அஸி'' முதலான வாக்கியங்களில் பொருந்து மென்று அடுத்த சுலோகத்தில் விளக்குகிறார்.]

தத்-த்வமஸ்யாதி3 வாக்யேஷு லக்ஷணா பா43லக்ஷணா |

ஸோ(அ)யமித்யாதி3 வாக்யஸ்த2 பத3யோரிவ நாபரா ||                        48

   ''தத் த்வம் அஸி'' முதலான வாக்கியங்களில் "அவன் - இவன்'' முதலான வாக்கியங்களிலுள்ள இரண்டு பதங்களுக்கும் எப்படியோ அப்படியே லக்ஷணையானது பாகலக்ஷணை (வாச்சியார்த்தத்தில் ஒரு அம்சத்தை விட்டும் மற்ற அம்சத்தை விடாமலும் இருக்கும் லக்ஷணை) யோகும். வேறுவித லக்ஷணை பொருந்தாது.

   [“தத் த்வம் அஸி'' (நீ அதாக இருக்கிறாய்), ''அஹம் பிரஹ்ம அஸ்மி” (நான் பிரஹ்மமாக இருக்கிறேன்), "அயம் ஆத்மா பிரஹ்ம” (இந்த ஆத்மா பிரஹ்மம்), "ப்ரக்ஞானம் பிரஹ்ம'' (இந்த ஆத்மா பிரஹ்மம்), "ப்ரக்ஞானம் பிரஹ்ம'' (அறிவே பிரஹ்மம்), என்கிற மஹாவாக்கியங்களில் அது என்றும் பிரஹ்மம் என்றும் சொல்லப்படுகிற பதார்த்தம் ஜகத் காரணமாய் வியாபகமாய் ஸர்வக்ஞமாய் என்பதெல்லாம் சொல்லக்கூடிய வஸ்து. ''நீ'' என்றும் ''நான்'' என்றும் ஆத்மா என்றும் அறிவு என்றும் சொல்லப்படுகிற பதார்த்தம் தேஹாதி அந்தக்கரணம் உள்பட உள்ள உபாதிகளினால் கட்டுப்பட்டு வெகு சிறியவனாய் அல்பக்ஞனாய் என்றெல்லாம் சொல்லக்கூடிய வஸ்து. இவ்விரண்டும் ஒன்று என்று சொல்லும் இவ்வாக்கியங்களுக்கு சரியானபடி அர்த்தம் சொல்லவேண்டுமானால் இந்த முரணான அம்சங்களை யெல்லாம் விட்டுவிட்டு இவ்விரண்டிலும் பொதுவாயுள்ள சைதன்யஸ்வரூபத்தைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகையால் இங்கு பாகலக்ஷணையே கொள்ள வேண்டியதாகும்.]

அஹம் ப்3ரஹ்மேதி வாக்யார்த2 போ3தோ4 யாவத்3-த்3ருடீப4வேத் |

சமாதி3-ஸஹிதஸ்-தாவத3ப்4யஸ்யேத் ச்ரவணாதி3ம் || 4                      49

      நான் பிரஹ்மம் என்ற வாக்கியத்தினுடைய அர்த்தத்தின் ஞானம் எதுவரை திடமாக ஏற்படுமோ, அதுவரை சமம் முதலான ஸாதனங்களுடன் கூடினவனாக  சிரவணம் முதலானவைகளை அப்யாஸம் செய்ய வேண்டும்.

  [சமம் முதலானவை: ‘சமாதி ஷட்க ஸம்பத்' எனப்படும். இவ்வாறு, சமம் (புலனடக்கம்), தமம் (மனவடக்கம்), உபாதி (தேட்டங்களை நிறுத்துதல்), திதிக்ஷை (எதிரெதிர் அநுபவங்களை ஸமமாக ஸஹித்தல்), ச்ரத்தை (வேதத் திலும் குருவிடமும் நம்பிக்கை), ஸமாதானம் (ஒருமைப்பாடு) என்பன. ச்ரவணம் முதலானவை; ச்ரவணம் (குரு உபதேசம் கேட்டல்), மனனம் (கேட்டதை இடைவிடாது சிந்தித்தல்), நிதித்யாஸனம் (சிந்தித்ததை அநுபவமாக்கிக் கொள்ளல்.]

ச்ருத்யாசார்ய-ப்ரஸாதே3ன த்3ருடோ4போ3தோ4யதா34வேத் |

நிரஸ்தாசேஷ-ஸம்ஸார-நிதா3ந: புருஷஸ்ததா3 ||                              50

விசீர்ண கார்யகரணோ பூ4த-ஸூக்ஷ்மைரநாவ்ருத: |

விமுக்த-கர்ம-நிக3ள: ஸத்3ய ஏவ விமுச்யதே ||                                51

  வேதத்தினுடையவும், ஆசார்யருடையவும் அருளினால் ஞரனமானது எப்பொழுது திடமாக ஏற்படுமோ, அப்பொழுது புருஷன் ஸம்ஸாரம் முழுவதற்கும் காரணமான அவித்யை (அஞ்ஞானம்) நீங்கினவனாக, சரீரம் இந்திரியங்கள் எல்லாம் உலைந்து போனவனாக, பூத ஸூஷ்மங்களால் சூழப்படாதவனாக, கர்மாவாகிற விலங்கிலிருந்து விடுபட்டவனாக உடனேயே முக்தி அடைகிறான்.

ப்ராப்34-கர்ம-வேகே3ந ஜீவந்முக்தோ யதா3 4வேத் |

கஞ்சித்-காலமநாரப்3த-கர்ம-ப3ந்த4ஸ்ய ஸம்க்ஷயே ||                           52

நிரஸ்தாதிசயாநந்த3ம் வைஷ்ணவம் பரமம் பத3ம் |

புநராவ்ருத்தி ரஹிதம் கைவல்யம் ப்ரதிபத்3யதே ||                            53

      பிராரப்த கர்மத்தின் வேகத்தினால் சிலகாலம் ஜீவன் முக்தனாக இருந்து (பிராரப்தம் தீர்ந்த பின்) பிராரப்தமல்லாத (ஸஞ்சிதம் ஆகாமி என்கிற கர்மாக்களின் கட்டு (ஏற்கெனவே) நசித்து விட்டபடியால் (கர்மாவினால் ஏற்படும் ஸம்ஸாரம் முற்றிலும் நசித்து) எதற்கு மேலாக ஆனந்தம் கிடையாதோ அப்பேர்ப்பட்ட ஆனந்த ஸ்வரூபமாயும், திரும்பவும் சம்ஸாரத்திற்கு வருவதே யில்லாததாயும், வைஷ்ணவமாயும் (அதாவது ஸர்வவியாபகமான பிரஹ்மத்திற் குரியதாயும்) ஒன்றாகவே தனித்திருக்கும் தன்மையுடையதாயும் உள்ள உத்தமமான நிலையை அடைகிறான்.

    [கர்மாவில் பிராப்தம், ஸஞ்சிதம். ஆகாமி என மூன்று. முன்வினையில் இப்பிறவியில் அநுபவிக்கப்பட்ட வேண்டியதென நிர்ணயமானது பிராரப்தம். மீதமுள்ளது (இனிவரும் பிறவிகளுக்காக வைக்கப்பட்டது) ஸஞ்சிதம். இப் பிறவியில் செய்து, பிற்பிறவிகளில் பயன் தருவது ஆகாமி. புலியென்று நினைத்து எய்யப்பட்ட அம்பு, புலியல்ல பசுவென்று தெரிந்து விட்டதற்காக நின்று விடாது. அத்த பிராணியை அடித்தே தீரும். அதே மாதிரியாக இந்த சரீரத்தைக் கொடுத்த பிராப்த கர்மா ஆத்மஞானம் ஏற்பட்டு விட்டதால் நசித்துவிடாது. அக் கர்மாவின் வேகமிருக்கும்வரை இருந்தே தீரும் எனவே, இப்பிராரப்தத்தை அனுபவித்துத் தீரும்வரை ஞானியும் சரீரத்தில் வாழ்வான் இந்நிலையில் சரீரம், ஆத்மஞானம் இரண்டும் சேர்ந்தேயிருக்கிறபடியால் அந்த ஞானியை ஜீவன் முக்தன் என்பார்கள் பலனைக்கொடுக்க ஆரம்பிக்காத முன் செய்த ஸமஸ்த தர்மாக்கள் முழுதும் ஞானத்தினால் நாசமடைந்துவிடுகின்றன. ஞான மேற்பட்ட பின் செய்யும் சேஷ்டைகளில் "நான் செய்கிறேன்'' என்கிற எண்ணமேயில்லாததினால் அவை ஆகாமி கர்மாவாகாது. ஆகையால் பிராரப்த கர்மாவின் முடிவில் வேறு ஜன்மத்தையோ, வேறு லோகத்தையோ கொடுக்கக்கூடிய எவ்வித கர்மாவும் இல்லாததினால் ஞானி ஸர்வ வியாபகமான பிரஹ்மத்தோடு ஒன்றாக ஆகி விடு கிறான். இதே விதேஹ முக்தி.]

 

No comments:

Post a Comment